அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைநகரான போர்ட்பிளேயரின் பெயரை 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை 'ஸ்ரீவிஜயபுரம்' என மாற்ற முடிவு செய்துள்ளோம்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி 74-வது பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4000 கிலோ சைவ விருந்து!
போர்ட் பிளேயர் என்ற பெயர் காலனித்துவப் பெயரைக் கொண்டிருப்பதால், ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கும் வகையில் இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் அந்தமான் தீவுகளுக்கு வரலாற்றில் ஈடு இணையற்ற பங்கு இருக்கிறது. சோழப் பேரரசில் கப்பற்படைத் தளமாகவும் இருந்த இந்தத் தீவுகள் இன்று முக்கியமான இடமாகவும் உள்ளன.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது நாட்டின் முதல் தேசியக் கொடியை முதலில் ஏற்றிய இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடி சென்ற செல்லுலார் சிறையும் இங்கே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்: அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் கடும் கண்டனம்!