அமேதியில் ஆசிரியர் குடும்பம் படுகொலை: பாலியல் வன்கொடுமைப் புகார் காரணமா?

அமேதியில், ஆசிரியர் மற்றும் அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆசிரியரின் மனைவி, கடந்த மாதம் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்தான் பின்னணியாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனக்கோ, எனது குடும்பத்தில் யாருக்கோ எந்த ஆபத்து நேரிட்டாலும் அதற்கு சந்தர் வெர்மாதான் காரணம் என கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, பட்டியலினத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுனில் குமாரின் மனைவி பூனம் பாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், வியாழக்கிழமை மாலை, பட்டியலினத்தைச் சேர்ந்த ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இவர்களது உடல்களுக்கு நடத்தப்பட்ட உடல் கூறாய்வில், ஆசிரியரை மூன்று முறையும், மனைவியை இரண்டு முறையும் 5 வயது மகள் மற்றும் 18 மாதக் கைக்குழந்தையை தலா ஒரு முறையும் சுடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இந்த நிலையில்தான், எனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்நிலையத்தில் பூனம் பாரதி புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த புகாரில், சந்தன் வெர்மா தன்னை தாக்கி, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரில் குறிப்பிட்டிருக்கும் சந்தன் வெர்மா, ரே பரேலியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைக்காக ரே பரேலியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு சந்தன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதனைத் தட்டிக்கேட்ட தன்னையும் கணவரையும் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், சந்தன் தன்னை துன்புறுத்தி, மிரட்டியிருப்பதாகவும், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பூனம் வலியுறுத்தியிருக்கிறார்.

இவர்களுக்கு இடையே வேறு ஏதேனும் முன்பகை இருந்திருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!