அமேதியில் ஆசிரியர் குடும்பம் படுகொலை: தகாத உறவு காரணமா? காவல்துறை விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், பட்டியலின ஆசிரியர், அவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிக்கும், ஆசிரியரின் மனைவிக்கும் இருந்த தகாத உறவுதான் காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமேதியில், அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் வியாழக்கிழமை மாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சந்தன் வெர்மா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது, தப்பியோட முயன்ற சந்தன் வெர்மாவை, காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமேதியின் பவானி நகரில் உள்ள வீட்டில், வியாழக்கிழமை மாலை புகுந்த சந்தன் வெர்மா, ஆசிரியர் சுனில் குமார், மனைவி பூனம், இரண்டு மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கடந்த ஆகஸ்ட் மாதம் பூனம், சந்தன் வெர்மா மீது காவல்நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளைப் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில், இந்தப் புகார்கள்தான் கொலைக்குக் காரணமா எனவும் சந்தேகிக்கப்பட்டது.

இதையும் படிக்க.. ஆசிரியரின் சைக்கிளை திருட்டுத்தனமாக ஓட்டிச் சென்றிருக்கிறேன்: முதல்வர் ரங்கசாமி பகிர்ந்த அனுபவம்

இந்த நிலையில், காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட சந்தன் வெர்மா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும் கொலை செய்யப்பட்ட பூனத்துக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்துள்ளது. இது அவரது கணவருக்குத் தெரிந்து, தன்மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்துகொள்ளவே முயன்றதாகவும், ஆனால், ஒரு முறை தன்னைத் தானே சுட்டபோது குறி தவறிவிட்டதால், மீண்டும் சுட்டுக்கொள்ள தைரியம் வரவில்லை என்றும், அதனாலேயே அங்கிருந்து தப்பியதாகவும் கூறியிருக்கிறார்.

அவர் இந்த கொலையை செய்வதற்கு முன்பு, தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில், ஐந்து பேர் சாகப் போகிறார்கள் என்று பதிவிட்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!