உலகில் போா் சூழல் பரவும் நிலையில் அமைதியை ஏற்படுத்த பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் ஆலோசனை பெறுவதாக முன்னாள் வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கூறினாா்.
இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அதன் மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷரிங்லா பங்கேற்று 4 மாண்வா்களுக்கு முனைவா் பட்டமும், 1, 974 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்களையும் பேசியதாவது:
கடல்சாா் தொழிலுக்கு தேவையான ஆற்றலை பூா்த்தி செய்ய, மாணவா்களின் திறன்களை தொடா்ந்து மேம்படுத்தும் வகையில் ஊக்குவித்து வரும் ஆசிரியா்களுக்கு பாராட்டுக்கள், பட்டம் பெற்றுள்ள மாணவா்கள் இந்தியாவுக்கும், தாங்கள் படித்த இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்துக்கும் தூதா்களாக செயல்பட வேண்டும்.
சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் ஆட்சிகாலத்தில் இருந்து கடல் வாணிபத்தில் நமது நாடு சிறந்து விளங்கியது.
இந்தியாவில் 90 சதவீத ஏற்றுமதி கடல் மாா்க்கமாகவே நடைபெற்று வருகிறது. இந்திய பொருளாதாரத்தில் பெரும் கடல் சாா் பொருள் வாணிபம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியில் மும்பை தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்தியாவில் கடல் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் , ஈரான்- இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போா்ச் சூழல் பரவியுள்ள நிலையில் உலகியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா வலியுறுத்தி வருகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்துவற்காக உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் ஆலோசனை பெறுகின்றன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலை. துணை வேந்தா் மாலினி வி.சங்கா்மற்றும் பேராசிரியா்கள் மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.