அரசியல் கட்சி தலைவர்கள் மிலாடி நபி வாழ்த்து: இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக திமுக அரசு நிற்கும் என முதல்வர் உறுதி

அரசியல் கட்சி தலைவர்கள் மிலாடி நபி வாழ்த்து: இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக திமுக அரசு நிற்கும் என முதல்வர் உறுதி

சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாடி நபிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மத நல்லிணக்கம், சகோதரத்துவம் தழைக்க அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து தலைவர்கள் தெரிவித்துள்ளதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும்.

“உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என எளியவர்களுக்காகப் பேசினார்.“உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்” எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார். “கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்” என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம்.

இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக திமுக அரசு என்றும் நிற்கும். திமுக அரசின் சார்பில் மீண்டும் மிலாடிநபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதிஏற்போம். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாடி நபி வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரியநோக்கங்களுக்காக இறுதி மூச்சுவரை வாழ்ந்து காட்டியவர். இந்நன்னாளில் அவரது கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நபிகள் நாயகம் பிறந்த நன்நாளில் அவரது போதனைகளை பின்பற்றி அனைவரும் நல் உள்ளத்தோடு, கருணை, பொறுமை, ஈகை,மனிதநேயம் ஆகியவற்றை கடைபிடித்து வாழ உறுதியேற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகுக்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் நபிகள் நாயகம். அவரது பிறந்தநாளை மிலாடி நபி திருநாளாககொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம், பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம் என அறிவுறுத்தி வாழ்ந்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை, உலகெங்கும்கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது இனிய வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைத்து மதங்களையும் மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ உள்ளமும், செயல்பாடும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நபிகளின் பொன்மொழியை மனதில் வைத்து வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அன்பு இருந்தால் மட்டுமே நம்மால் பிறருக்கு உதவ முடியும் என்பதில் உறுதியாக இருந்து, வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்திடுவோம்.

இதேபோன்று, பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, வி.கே.சசிகலா, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்