அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை காலை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செளராஷ்டிரம் மற்றும் கட்ச் இடையே மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரமாக மெதுவாக நகர்ந்து வருகிறது.
தற்போது குஜராத்தின் வடக்கு – வடமேற்கு திசையில் 60 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – தென் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாளை காலை அரபிக் கடலின் வடகிழக்கு பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்த ’அஸ்னா' என்ற பெயர் வைக்கப்படும். ஏற்கெனவே, இந்த ஆண்டு மே மாதம் உருவான புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்
இதற்கிடையே, வியாழக்கிழமை (ஆக.29) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து தெற்கு ஒடிஸா, வடக்கு ஆந்திர கரையோரம் ஆக.30, 31 ஆகிய தேதிகளில் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.