ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந்தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று காலை அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.