ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 20 ரயிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், 30க்கும் அதிகமான ரயில்கள் மாற்று வழித்தடத்தில் மாற்றிவிடப்பட்டுள்ளன.
ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விஜய்வாடாவுக்குட்பட்ட அம்பாபுரம், நைனாவரம், நுன்னா, பதப்பாடு ஆகிய பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் 30க்கும் அதிகமான ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு, சார்மினார், கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனபாடு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் பயணித்த பயணிகள் விஜயவாடா ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து சிலர் பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
கேசமுத்திரம், டோர்னக்கல், கம்மம் போன்ற இடங்களில் வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழித்தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!
அதிகாலை 1 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் இருந்த பயணிகள் பேருந்து மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர். ரயிலில் தவித்த பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாட்டிலிருந்தும் பேரிடர் மீட்குக் குழுவினர் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.