ஆந்திரம், தெலங்கானா வெள்ள நிவாரணம்: ரூ. 1 கோடி வழங்கிய அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக ஆந்திரம், தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை மழை வெள்ளத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வெள்ள பாதிப்பு

மழை வெள்ளத்தில் 4,15,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரத்தில் 43,417 பேர் மாநிலம் முழுவதும் உள்ள 163 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 197 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு இருவரும் தனித்தனியே 1 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜுனும் ரூ. 1 கோடி வழங்குவதாகக் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் எக்ஸ் தளப் பதிவு

இதுபற்றி நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சவாலான சூழலில் இரு மாநில முதல்வர்களில் நிவாரண பணிக்களுக்கு ஆதரவாக நிவாரண நிதி ரூ. 1 கோடி வழங்குகிறேன். அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை