ஆனித் திருவிழா: வெள்ளி ரிஷப வாகனங்களில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வீதி உலா

கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிக கருத்தரங்கம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நெல்லை

திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித் திருவிழாதொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிக கருத்தரங்கம், பத்தி இன்னிசை, புராண நாடகம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அவ்வகையில், 4-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. காலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்ததது. இரவில் சுவாமி நெல்லையப்பரும்-காந்திமதி அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

கோவில் நின்றசீர்நெடுமாறன் கலையரங்கத்தில் பாலசுந்தரம் குழுவினரின் பட்டினத்தார் சரித்திர புராண நாடகம் நடந்தது. தரங் அகாடமி நாட்டிய பள்ளி, தாளம் நடன கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, உமா ஹரிஹரசுப்பிரமணியன் குழுவினரின் வாய்ப்பாட்டு, திருவுருமாமலை பன்னிருத்திருமுறை வழிபாட்டு குழுவின் திருமுறைபாராயணம் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்