ஆம்ஸ்ட்ராங் கொலை: மனித உரிமைகள் ஆணையத்தை நாடும் பாஜகஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகக் கூறினார் அண்ணாமலை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, ''பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை இதுபோன்ற அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதில்லை. நாளை தமிழக பாஜக தலைவர்கள் தில்லி செல்ல உள்ளனர். பாஜக மூத்த தலைவர்கள் 5 பேர் தில்லியில் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட உள்ளோம். இதேபோன்று, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக முறையிடும்'' என அண்ணாமலை குறிப்பிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதில், அவர் உயிரிழந்தார்.
குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதல் கட்டமாக 8 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இன்று மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.