ஆம் ஆத்மி கட்சியுடன் கடவுள் இருக்கிறார், பயப்படத் தேவையில்லை என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பணமோசடி விசாரணையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சீவ் அரோராவின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால் கூறியது,
ஊழல் விசாரணை என்ற பெயரில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏஜென்சிகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியைக் குறிவைப்பதாகவும், மேலும், தன்னையும், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் பிற கட்சித் தலைவர்களையும் கைது செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் கட்சியைப் பின்தொடர்வதுபோல் தெரிகிறது. அந்தக் கட்சியில் உள்ளவர்களை ஏஜென்சிகளை கொண்டு தொடர்ந்து பிரச்னைகளை அளித்து வருகிறார்.
கடவுள் ஆம் ஆத்மி கட்சியுடன் இருக்கிறார். பயப்பட வேண்டிய அவசியமில்லை. கட்சியில் உள்ளவர்களும் எந்த தவறும் செய்யப்படவில்லை. திரைச்சீலை மெதுவாக விலகுகிறது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு பிரதமரின் யதார்த்தம் வெளிப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரோரா மற்றும் பிறருக்கு எதிரான நிலமோசடி வழக்கு தொடர்பாக ஜலந்தர், லூதியானா, குருகிராம் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை திங்கள்கிழமை பல இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.லூதியானா (பஞ்சாப்) மற்றும் குருகிராம் (ஹரியாணா) ஆகிய இடங்களில் உள்ள 61 வயதான எம்.பி.யின் வீடு உள்பட சுமார் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.