ஆர்.ஜி. கர் மருத்துவமனையைச் சுற்றி தடை உத்தரவு: செப்.30 வரை நீட்டிப்பு!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சுற்றியுள்ள தடை உத்தரவுகள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் அரசு நடத்திவரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர் கருத்தரங்கு அறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், மருத்துவர்களைத் தாக்கவும், மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான அரசை இழிவுபடுத்தவும் சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் கூறி தொலைபேசி வாயிலாக ஆடியோ கிளிப் ஒன்றை திரிணமுல் தலைவர் குணால் கோஷ் வெளியிட்டதைத் தொடர்ந்து குணால் கோஷ் மற்றும் கலதன் தாஸ்குப்தா உள்ளிட்ட இருவரையும் கொல்கத்தா போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஆர்.ஜி. கர் மருத்துவமனை அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மருத்துவமனையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 18 அன்று மருத்துவமனையைச் சுற்றிலும் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்குச் செல்லும் சாலைகளைத் தவிர, ஷயாம்பஜார் ஃபைபாயின்ட் கிராஸிங் ஆகிய இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் அமைதியைச் சீர்குலைக்கும் எந்தவொரு பொருளும் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து