கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நிதி முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக மேலும் 6 மருத்துவர்களை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த வழக்கில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் அவரின் உதவியாளராகப் பணிபுரிந்த ஆஷிஷ் பாண்டே ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பண முறைகேடு விவகாரத்தில், இந்த 6 மருத்துவர்கள் குறித்த தரவுகளை சேகரித்து மாநில அரசிடம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களைப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்குவதன் வெளிப்படையான விசாரணை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி முறைகேடு வழக்கில் 6 மருத்துவர்களுக்குத் தொடர்புள்ளது குறித்த முக்கிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும், இதனை ஆரம்பப் புள்ளியாக வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரின் கொலைக்கான பின்னணி குறித்து ஆராயும்போது, மருத்துவமனை நிர்வாகத்தினர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும், பட்டம் பெற மருத்துவ மாணவர்களிடம் பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதனை பயிற்சி பெண் மருத்துவர் தட்டிக்கேட்டதால், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும் ஆடியோக்கள் வெளியாகியிருந்தன.
நிதி முறைகேடு விவகாரத்தில் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.