இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் பின், நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா! அடுத்த போட்டியில் தோற்றால்?
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட சஜித் கான் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஷாகின் ஷா அஃப்ரிடி, மைக்கேல் வாகன் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ள பாகிஸ்தான் அணியை அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இருவரும் பாராட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாகின் ஷா அஃப்ரிடி பதிவிட்டிருப்பதாவது: நோமன் அலி மற்றும் சஜித் கான் இருவரும் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு அபாரமாக பந்துவீசினர். சௌத் ஷகீல் மிக அருமையான சதத்தைப் பதிவு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை; டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தான் அணிக்கு கிடைத்துள்ள அருமையான தொடர் வெற்றி. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு செயல்படத் தொடங்கியவுடன், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. கடந்த ஆண்டு இந்தியாவில் இதுபோன்று தொடரை இழந்தோம். தற்போது பாகிஸ்தானில் தொடரை இழந்துள்ளோம். இங்கிலாந்தின் அதிரடியான பேஸ்பால் யுக்தி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிய மைதானத்தில் வேலை செய்யவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.