இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த பிரதமர் மோடி

ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்திருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

ரோம்,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜி-7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் இத்தாலி அரசு, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக மோடி இத்தாலி சென்றுள்ளார். இத்தாலில் அபுலியா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று தொடங்கிய ஜி-7 மாநாடு 15-ந்தேதி(நாளை) வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்திருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில், இலவச வர்த்தக ஒப்பந்தம்(FTA) தொடர்பாக ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்