இந்தியா கூட்டணி கட்சித் தலைவரின் தந்தை கொலை: ராகுல் கண்டனம்!பிகார் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கி சாஹ்னி குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும்ராகுல் காந்தி கோப்புப் படம்
பிகாரில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனர் முகேஷ் சாஹ்னியின் தந்தை ஜித்தன் சாஹ்னி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,
விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனரும், பிகாரின் முன்னாள் அமைச்சருமான முகேஷ் சாஹ்னியின் தந்தையுமான ஸ்ரீ ஜித்தன் சாஹ்னி கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
முகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பிகார் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி சாஹ்னி குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிகாரின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் முகேஷ் சாஹ்னியின் தந்தை ஜித்தன் சாஹ்னி பிகார் மாநிலத்தின் தார்பங்கா மாவட்டத்திலுள்ள அவரது பூர்வீக வீட்டில் இன்று (ஜூலை 16) காலை கொல்லப்பட்டார்.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸுடன் இணைந்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சி, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது.
தார்பங்கா மாவட்டத்திலுள்ள கான்ஷியாம்பூரில் அமைந்துள்ள ஜித்தன் சஹானியின் வீட்டுக்குள் திருட முயற்சித்த மர்ம நபர்கள் சிலரை சஹானி தடுக்க முற்பட்டதால் அவரை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க, 3 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.