இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்ட்டில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான டாஸ் காலையில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவமழை காரணமாக பெய்த கடுமையான மழையால் டாஸ் தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூரு மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்திருப்பதால், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மிக அதிகனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.வார இறுதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் அடுத்த ஐந்து நாள்களில் அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று(அக்.15) காலை 11 மணிக்கு இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளவிருந்தது. ஆனால், மழையின் காரணமாக இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அக்.16, அக்.17 இரண்டு நாள்களில் 70 -90 சதவிகிதம் மழை வருமென கணிக்கப்பட்டுள்ளது. 3-ஆம் நாளில் மழை நிற்குமென கணிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே சிறந்த மழைநீர் வடிகால் உள்ள மைதானத்துக்கு பெயர் பெற்றது பெங்களூரு சின்னசாமி மைதானம். அதனால் மழை குறைந்தால் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. அதேசமயம் மழையில் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் போட்டி முழுமையாக 5 நாள்களும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்ற இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிரான தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேவேளையில் இந்தியாவின் நொய்டாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழையால் 5 நாள்களும் ரத்தாக அதன் பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இதனால், நியூஸிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டிம் சௌதி தெரிவித்தார். இதனால், அவருக்கு பதிலாக டாம் லதாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.