இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை மற்றும் நாட்டின் மக்கள்தொகை சமநிலையை கருத்தில் கொண்டு அதிக குழந்தைகளை மக்கள் பெற்றுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதி வளர்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் மக்கள்தொகை விகிதம் குறித்து கவலைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!
அப்போது அவர் பேசியதாவது:
“ஜப்பான், சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையில் அதிகளவிலான வயதானவர்கள் உள்ளதால் விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரத்தில் மக்கள்தொகையில் வயதானவர்கள் அதிகரிக்கும் அறிகுறிகள் பிரச்னை எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2047 வரை மக்கள்தொகையில் சமநிலையை தக்க வைத்துக் கொண்டாலும், தென் மாநிலங்களின் மக்கள்தொகை விளைவுகளை சந்திக்க தொடங்கிவிட்டன.
கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறி, வேலைவாய்ப்பை தேடி நகரங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இதனால் கிராமங்களில் முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
தேசிய கருவுறுதல் சராசரியான 2.1-ஆக இருக்கும் நிலையில், தென் மாநிலங்களில் மிகவும் குறைவாக 1.6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இது தொடர்ந்தால், 2047-க்குள் ஆந்திரம் கடுமையான முதுமைப் பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க, நாம் இப்போது இருந்தே செயல்பட வேண்டும்.
இதனால், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறோம்.
இந்த நடவடிக்கையானது, மக்கள் அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதாகும். வரும் காலங்களில் துடிப்பான அதிகளவிலான இளைஞர்கள் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாகும்” எனத் தெரிவித்தார்.