இறுதிப்போட்டியில் தோற்றால் ரோஹித் சர்மா கடலில் குதித்து விடுவாரா? என்ன சொல்கிறார் சௌரவ் கங்குலி!

இறுதிப்போட்டியில் தோற்றால் ரோஹித் சர்மா கடலில் குதித்து விடுவாரா? என்ன சொல்கிறார் சௌரவ் கங்குலி!டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சுதந்திரமாக விளையாட வேண்டும் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.ரோஹித் சர்மாபடம் | ரோஹித் சர்மா (இன்ஸ்டாகிராம்)

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சுதந்திரமாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நாளை (ஜூன் 29) மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறவுள்ளது. ஒருபுறம் உலகக் கோப்பையை ஒரு முறை கூட வெல்லாத தென்னாப்பிரிக்க அணியும், மற்றொரு புறம் 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைக்கானத் தேடலில் உள்ள இந்திய அணியும் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்கின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சுதந்திரமாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சௌரவ் கங்குலி பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கூட கிடையாது. ஆனால், அவர் இந்திய அணியை தோல்வியே சந்திக்காமல் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணியை தோல்வியே காணாமல் இறுதிப்போட்டி வரை வழிநடத்தியுள்ளார்.

நான் பிசிசிஐ-ன் தலைவராக இருந்தபோது ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முதலில் தயாராக இல்லை. அவரைக் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொள்ள வைக்க நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. தற்போது அவரது தலைமையின்கீழ் இந்திய கிரிக்கெட் வளர்ச்சியடைவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். நீண்ட தொடர்களில் இதுபோன்று கோப்பையை வெல்வது மிகவும் கடினம். சில நேரங்களில் ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறுவது மிகவும் கடினம். சர்வதேச தொடர்களைக் காட்டிலும் ஐபிஎல் தொடர்களில் வெல்வது கடினம் என கூறவில்லை. இதனை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். ஐபிஎல் தொடரில் வெற்றி பெற 16-17 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியிருக்கும். ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெற 8-9 போட்டிகளில் வெற்றி பெற்றால் போதுமானது.

6 மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பைகளை இழப்பதை ரோஹித் சர்மா விரும்பமாட்டார் என நினைக்கிறேன். 6 மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோல்வியடைவதற்கு பதிலாக அவர் பார்படாஸில் உள்ள பெருங்கடலில் குதித்து விடுவார். இந்திய அணியை அவர் சிறப்பாக முன்னின்று வழிநடத்தி வருகிறார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிலும் அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்புகிறேன். இந்திய அணி வீரர்கள் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் எந்த ஒரு பதற்றமுமின்றி சுதந்திரமாக விளையாட வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்