லெபனானில் இருந்து இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைஃபா மீது ஏவுகணைகள் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐந்து ஏவுகணைகள் மூலம் துறைமுக நகரான ஹைஃபாவில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 10 பேர் வரை காயமடைந்ததாகக் கூறபட்ட நிலையில் பல கட்டிடங்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் பலியானவர்கள் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.
கலிலி பகுதியில் 15 ஏவுகணைகளைக் கண்ட பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதில் சில ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபனானின் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல இடங்களை நாசப்படுத்தி மக்கள் பலரும் பலியானதால் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: காஸாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 26 போ் உயிரிழப்பு
இந்தத் தாக்குதல்களில் எவ்வளவு பேர் பலியாகியுள்ளனர் என்று தற்போது வரை லெபனானிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
லெபனான் எல்லையில் அமைந்துள்ள இஸ்ரேல் எல்லைப் படையினரின் 36-வது டிவிசன் முகாமில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார். லெபனானில் இஸ்ரேல் படைகள் எவ்வளவு முன்னேறியுள்ளன, அவற்றின் இலக்குகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டன.
இதையும் படிக்க: மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்: நெதன்யாகு!
அங்கு சென்று வந்தபின் பேசிய நெதன்யாகு, “நான் நமது இஸ்ரேல் ராணுவத்தினருடன் வடக்கு எல்லையில் இருக்கிறேன். இங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் லெபனான் எல்லையில் நம்மை தாக்க முயற்சிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் உள்கட்டமைப்பை நமது சக வீரர்கள் தடுத்து வருகின்றனர்.
நான் அவர்களிடம் சொன்னது இதுதான். நீங்கள் வீரர்கள். உங்கள் சக வீரர்களுடன் இணைந்து காஸா, ஜூடியா, சமேரியா பகுதிகள் முழுக்க போராடி வரும் நீங்கள் மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிங்கங்கள்” என்று பேசினார்.
கடந்த ஆண்டு அக். 7 அன்று நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் புகுந்து 1,200 பேரைக் கொன்று, 250 பேரை சிறைபிடித்துச் சென்றனர். அதில் 100 பேர் இன்னும் கைதிகளாக உள்ளனர்.