ஈரானின் தென்கிழக்கு தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய இராணுவ தளங்கள் சேதமடைந்தன.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால், சேதம் தொடர்பாக வெளியான செயற்கைக் கோள் படங்களின் மூலம் தாக்குதலின் பாதிப்பு தெரிய வந்துள்ளது.
ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக கடந்த காலத்தில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் சந்தேகித்த இடமான பார்ச்சினின் ராணுவ தளங்களில் உள்ள கட்டிடங்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்டன.
அணு ஆயுத சோதனை குறித்து ஈரான் பல ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்தபோதிலும், சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் தெஹ்ரானில் 2003 ஆம் ஆண்டு வரை அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதாகக் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க | இஸ்ரேல் தாக்குதலை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஈரான் தலைமை மதகுரு கமேனி
கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு தளங்களை ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில் அங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை கோஜிர் மற்றும் பார்ச்சின் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களை ஈரான் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அந்தத் தளங்களின் புகைப்படங்களும் ஈரான் ராணுவத்தினரால் வெளியிடப்படவில்லை.