ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இறையாண்மைக்கு எதிரானது: பாகிஸ்தான்

இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லமபாத்,

காசாவில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த 1-ம் தேதி 180-க்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது. தெஹ்ரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை ஈரான் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது: – இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும். ஐ.நா. பாதுகாப்பு சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல். இந்தத் தாக்குதல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. ஏற்கெனவே கொந்தளிப்பான பிராந்தியத்தில் ஆபத்தினை விரிவாக்குகிறது. பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சுழற்சியான மோதல் மற்றும் விரிவாக்கத்துக்கு இஸ்ரேலே முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Related posts

55,000+ இருக்கைகள், மாவட்ட வாரியாக ‘கேபின்’… – விஜய்யின் தவெக மாநாடு களத்தின் ஹைலைட்ஸ்

யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து சுகாதாரத் துறைக்கு கடிதம்

Bhopal’s Deaf-Mute Kanishka To Represent India