ரத்தன் டாடா மறைவுக்கு அவரது முன்னாள் காதலியும் பாலிவுட் நடிகையுமான சிமி கரேவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு காலமானார்.
டாடா நிறுவனத்தை உலகம் முழுவதும் விரிவடையச் செய்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ரத்தன் டாடா. 1991 முதல் 2012 வரையில் டாடா குழுமத்தின் தலைவராக பதவி வகித்தார்.
அவருக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, பில்கேட்ஸ் உள்ளிட்டோர் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | ஒரு சகாப்தத்தின் முடிவு! ரத்தன் டாடா கொண்டாடப்படுவது ஏன்?
இந்நிலையில் ரத்தன் டாடாவின் முன்னாள் காதலியும் பாலிவுட் நடிகையுமான சிமி கரேவால், டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'நீங்கள் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
உங்கள் இழப்பைத் தாங்குவது மிகவும் கடினம். சென்று வாருங்கள் நண்பரே..' என்று பதிவிட்டுள்ளார்.
சிமி கரேவால் 1970-80 களில் பாலிவுட்டில் பிரபலமானவர். அந்த நேரத்தில் ரத்தன் டாடாவும் சிமி கரேவாலும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் திருமணமும் செய்துகொள்ளப்போவதாக அப்போது கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவர்கள் இருவருமே இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.