உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11ஆம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இதற்கு மறுநாள் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். நவம்பர் 11 ஆம் தேதி பதவியேற்கிறார்'' எனப் பதிவிட்டுள்ளார்.
சஞ்சீவ் கன்னா யார்?
1960 மே 14ஆம் தேதி பிறந்தவர் சஞ்சீவ் கன்னா. 1983ஆம் ஆண்டு பார் கவுன்சில் உறுப்பினரானார். ஆரம்பக்கட்டத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து பின்னர், தில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
2005ஆம் ஆண்டு தில்லியின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பளித்தவர். அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வில் உறுப்பினராக இருந்தவர்.
இதையும் படிக்க | நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை