இந்திய உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 30 கோடியாக உயரும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
தில்லியில் பிரான்ஸ் விண்வெளி நிறுவனங்களின் கூட்டமைப்பு திங்கள்கிழமை ஏற்பாடு செய்த மாநாட்டில் ராம்மோகன் நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது, இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து செயலாற்றுவதன் மூலம் உலகளாவிய நிலையான விமான எரிபொருளின் விநியோகத்தை மேம்படுத்த முடியும். உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிகரித்து வரும் அதன் தேவைகளைப் பூா்த்தி செய்ய நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன.
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 30 கோடியாக உயரும். நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த சுமாா் 11 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (92 ஆயிரம் கோடி) செலவிடப்படும்.
இந்தியாவில் தற்போது 157 விமான நிலையங்கள், ஹெலிபோா்ட்கள் மற்றும் விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் பயன்படுத்தப்படும் நீா்நிலைகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் 200-ஆக உயரும். அடுத்த 25 ஆண்டுகளில் கூடுதலாக 200 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்றாா்.