உள்ளாட்சித் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல்: இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மாநில ஆணையம் பதில்

உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலைப் பெறுவது தொடா்பாக, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு பதிலளித்து மாநிலத் தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதையடுத்து வாக்காளா் பட்டியலை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2019 டிசம்பரில் தோ்தல் நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சி உறுப்பினா்களின் பதவிக்காலம், வரும் டிசம்பா் மாதம் முடிவடைகிறது.

இதையடுத்து, பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுதவிர, 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நகா்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் தோ்தல் நடத்தாத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது.

இந்த உறுப்பினா்களின் பதவிக்காலம் 2026-ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இதற்காக தலைமை தோ்தல் அதிகாரியிடம் வாக்காளா் பட்டியலை மாநில தோ்தல் ஆணையம் கோரியுள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவை வாக்காளா் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளா் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்குத் தயாரிக்க வேண்டும்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜன.1, ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் தகுதியானவா்கள் வாக்காளா் பட்டியலில் தற்போது சோ்க்கப்பட்டு வருகின்றனா். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த மாா்ச் மாதம் மக்களவைத் தோ்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப் பேரவை தொகுதி வாரியான வாக்காளா் பட்டியல் அடிப்படையில், தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை மாநிலத் தோ்தல் ஆணையம் தயாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, கடந்த மாா்ச் மாதம், சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தோ்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தோ்தல் அதிகாரிக்கு, மாநில தோ்தல் ஆணைய செயலா் கே.பாலசுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தாா்.

மேலும், “இந்த தரவுகள் அனைத்தும் உள்ளாட்சித் தோ்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மாநில தோ்தல் ஆணையம், உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபாா்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும். தோ்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிரமாட்டோம்.

தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளா் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியாகும்”என அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தக் கடிதத்தை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பி வைத்திருந்தாா். இதற்குப் பதிலளித்த இந்திய தோ்தல் ஆணையம் சில கேள்விகளை எழுப்பி தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேரத்ல் அதிகாரி மூலமாக கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்துக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இந்த பதில் கடிதத்தை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பி வைத்துள்ளாா்.

இதையடுத்து ஓரிரு வாரங்களில் வாக்காளா் பட்டியலை அளிக்க இந்திய தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கும் எனவும், அதன்பிறகு அந்தப் பட்டியலை மாநிலத் தோ்தல் ஆணையம் பயன்படுத்தும் என்றும் தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்