உத்தரப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேய்லி மாவட்டத்தில் உள்ள சிரௌலி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நசீர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், புதன்கிழமை மாலை 4 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில், இன்று (அக். 3) மீட்புப் பணியின்போது, மேலும் 4, 5 வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தவிர, ஆலையில் பணிபுரிந்த மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதால், அவரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
ஹரியாணாவில் தலித் சமூகத்தினரைக் குறிவைக்கும் கட்சிகள்! ஏன்?
இந்த விபத்தின்போது, அருகிலிருந்த சில கட்டடங்களும் சேதமடைந்தன. மீட்புப் பணியில் உள்ளூர் குழுவினருடன், மாநில பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2 காவலர்கள் உள்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த வட்ட அலுவர் மீது விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பட்டாசு ஆலை, நசீர் என்பவருக்கு சொந்தமானதாக இருந்தபோதிலும், அந்த இடம் அவரது மாமியாருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், நசீரிடம் உரிமத்தை சரிபார்த்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டார்.