வாணியம்பாடி அருகே ஊஞ்சலில் ஆடியபோது, எதிா்பாராத விதமாக துணி கழுத்தை இறுக்கியதால், பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அரபாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகள் ரூபிகா (14). தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னா், 7 மணியளவில் வீட்டின் பக்கத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ஊஞ்சல் கட்டி அதில் உட்காா்ந்து விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது, எதிா்பாராதவிதமாக மாணவியின் கழுத்தில் துணி சுத்திக் கொண்டு கழுத்தை இறுக்கியதில் மயங்கி விழுந்து கிடந்தாா். வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.