ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கம் மனு

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கம் மனு

சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலமையில், பேரவை தலைவர் தாடி ம.ராசு, பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதை அண்ணா தொழிற்சங்கம் ஏற்கவில்லை. இப்போது 4 ஆண்டுகளை கடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதுவரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்காமல் தள்ளி வைத்துள்ளது. இதை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போக்குவரத்து துறை செயலரிடம் மனு அளித்திருக்கிறோம். அந்த ஓராண்டுக்கு இழப்பீடாக, இடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு ஓட்டுநருக்கும் ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உயர் நீதிமன்ற ஆணைப்படி வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்றும் கோரி இருக்கிறோம்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா தொற்று இருந்தபோது கூட 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. அடுத்த முறை 20 சதவீதம் போராடி வாங்கினோம். செலவினங்கள் தற்போது அதிகமாக இருப்பதால் தீபாவளி போனஸ் இந்த ஆண்டு 30 சதவீதம் வழங்கக் கோரியிருக்கிறோம்.

அக்.10-ம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால், போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டங்களை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடத்துவோம்.

தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை அரசு கொடுக்க தயங்குவதால் முதற்கட்டமாக காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம். காலத்தோடு ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால், தீபாவளி நேரத்தில் நாங்கள் போராட்டம் நடத்துவதற்கு அவசியம் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

சென்னை வான் சாகசம்: முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தவில்லை – ஜெயகுமார் விமர்சனம்

சேலத்தில் இயற்கை சந்தை, விதை திருவிழா: 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள்

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்