ஈரான் தனது முழு பலத்துடன் லெபனானை ஆதரிக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலீபாஃப் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டில் லெபனான் சபாநாயகர் நபி பெர்ரி உடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர், “லெபனான் அரசின் மக்கள், இஸ்லாமிய பாதுகாப்புத் தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு ஈரான் எப்போதும் முழு பலத்துடன் தனது ஆதரவைத் தெரிவிக்கும்” என அவர் கூறினார்.
மேலும், போரினால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு அரசாங்கத்தின் மேற்பார்வையில் உதவிகளை வழங்க ஈரான் தயாராக உள்ளதாகக் கூறிய அவர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசருல்லாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: லெபனான் நிலைகளில் இருந்து வெளியேற ஐ.நா. அமைதிப் படை மறுப்பு
லெபனானுக்கு ஈரான் உதவத் தயராக இருப்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக லெபனானுக்கு வருகை புரிந்த ஈரான் சபாநாயகர், இஸ்ரேல் கடந்த வியாழனன்று (அக். 10) தாக்குதல் நடத்திய பெய்ரூட் நகரின் அல்-நவுரி பகுதியைப் பார்வையிட்டார். இங்கு நடத்தப்பட்டத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டு 117 பேர் காயமடைந்தனர்.
பின்னர் லெபனான் பிரதமர் நஜீப் மிகாதியைச் சந்தித்த அவர், தற்போது லெபனான் அரசு போர்நிறுத்தம், இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், லெபனான் மக்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: தெற்கு லெபனான் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் எச்சரிக்கை!
அத்துடன், லெபனான் அரசு தெற்குப் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்துவதுடன், இந்தப் பிரச்னையில் தீர்வு காண இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுடனும் தேவையான தொடர்புகளை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
கடந்த சில வாரங்களாக லெபனானில் தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.