எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு

எத்தியோப்பியா நிலச்சரிவில் சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அடிஸ் அபாபா,

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்தநிலையில் கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அங்கு மண்ணில் புதையுண்டன. அப்போது மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சியில் அவர்களது உறவினர் இறங்கினர். ஆனால் அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மண்ணில் புதையுண்டனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை 157 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னரும் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளளது. இதில் சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் புதையுண்டவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மண்ணில் புதையுண்டவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்