பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவருடைய அலுவலகம் அருகே கடந்த அக். 12 இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை சுட்ட முக்கியக் குற்றவாளி மற்றும் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | சல்மான் கான் மீது கொலை முயற்சி: பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவருக்கு போலீஸ் காவல்
இந்த நிலையில், தனது தந்தையின் கொலை குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிரத்தின் வந்த்ரே தொகுதி எம்எல்ஏ ஸீஷான் சித்திக், ”அவர்கள் என் தந்தையை அமைதிப்படுத்தினார்கள். ஆனால், அவர் ஒரு சிங்கம் என்பதை மறந்துவிட்டனர். அவருடைய கர்ஜனை என்னுள்ளே இருக்கிறது. அவருடைய போராடும் குணம் என் நரம்புகளில் உள்ளது. அவர் நியாயத்துக்காகவும் மாற்றத்துக்காகவும் போராடினார். அதற்காக எதையும் எதிர்க்கத் தயாராக இருந்தார்.
அவரை வீழ்த்தியவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதி தற்போது என் மீது பார்வையை திருப்பியுள்ளனர். அவர்களுக்கு நான் தெரிவிப்பது இதுதான் : சிங்கத்தின் ரத்தம் என் நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இங்கே அச்சமின்றி இருக்கிறேன். அவர்கள் என் தந்தையை எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த இடத்திலிருந்து நான் மேலே எழுவேன். இந்த சண்டை இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இன்று, நான் என் தந்தை நின்ற இடத்தில் நிற்கிறேன். உயிருடன், எதற்கும் தயாராக, எதற்கும் அஞ்சாமல். என்னுடைய வந்த்ரே கிழக்கு பகுதி மக்களுக்கு துணையாக நான் எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.