ரத்தன் டாடா மறைவுக்கு ஏர் இந்தியா விமான கேப்டன் ஸோயா அகர்வால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, பில்கேட்ஸ் உள்ளிட்டோர் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏர் இந்தியா கேப்டன் ஸோயா அகர்வால், ரத்தன் டாடாவுடனான ஒரு சுவாரசிய நிகழ்வைப் பகிர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ‘உங்கள் இழப்பு…’ – ரத்தன் டாடாவின் முன்னாள் காதலியின் இரங்கல் பதிவு!
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நியூயார்க்கிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்த ரத்தன் டாடா என் வாழ்க்கையையே மாற்றினார். அவரது பணிவு, கருணை, மரியாதை என்னில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
விமானத்தை விட்டு அவர் இறங்கும்போது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டேன். அப்போது நான் எழுந்திருக்க முற்பட்டபோது, அவர் என்னைத் தடுத்து, 'கேப்டன், இது உங்கள் சிம்மாசனம். இது நீங்கள் சம்பாதித்தது' என்று கூறி புகைப்படம் எடுக்கும்போது என் பின்னால் வந்து நின்றார். அவரது பணிவு, தலைமை பற்றிய எனது எண்ணத்தை மாற்றியது.
இந்த புகைப்படம் தனிப்பட்ட முறையில் என்னை ஊக்குவித்தது. அதனால் இன்று எனது நன்றி, ஊக்கம், மனச்சோர்வை பகிர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் மிஸ்டர் டாடா. உங்கள் பண்பு என் இதயத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களிலும் வாழ்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
உலகின் நீண்ட தொலைவு விமானத்தை இயக்கிய சாதனை விமானி என்ற பெருமையைப் பெற்றவர் கேப்டன் ஸோயா அகர்வால்.