ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபை, சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆய்வு செய்தது. இந்த நிலையில், செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பிசிசிஐ அதிகாரிகள் சிலர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்வதற்காக ரியாத்துக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலம் எப்போது?
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகத்தினர், தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 மாலை 5 மணிக்குள் தெரிவிக்குமாறு பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது.
இதையடுத்து, நவம்பர் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஏலத்தில் பங்கேற்கவுள்ள அணிகளின் குழுக்களுக்கு பயணத் திட்டம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், விரைவில் தேதியையும் இடத்தையும் தெரிவிக்குமாறு அணி நிர்வாகத்தினர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!
குழப்பத்தில் பிசிசிஐ?
பெர்த் நகரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, நவ. 22 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஒளிபரப்பும் டிஸ்னி பிளஸ் நிறுவனம்தான் மெகா ஏலத்தையும் நேரலையில் ஒளிபரப்பவுள்ளது.
டெஸ்ட் போட்டி நடைபெறும் அதே நாளில் ஏலமும் நடைபெற முன்மொழியப்பட்டுள்ளதால், ஒளிபரப்பில் பிரச்னை ஏற்படுமா என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஆஸ்திரேலியா நேரத்தை கணக்கில் கொண்டு, மெகா ஏலத்தை பிற்பகலில் நடத்தினால், ஒளிபரப்பில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது என்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.