ஒரு சமூகத்தின் நம்பிக்கையை அவமரியாதை செய்ய கூடாது: லட்டு விவகாரத்தில் தமிழிசை, குஷ்பு கருத்து
சென்னை: லட்டு விவகாரத்தில் ஓரு சமூகத்தின்நம்பிக்கையை அவமரியாதை செய்யக்கூடாது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் சரி, ஆந்திராவை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி உணர்வுப்பூர்வமாக ஒரு தவறு நடந்ததுஎன்றால், அந்த தவறை சுட்டி காண்பிக்க கடுமையான முயற்சி மேற்கொள்கின்றனர்.
ஒரு நம்பிக்கையை யாரும் அவமரியாதை செய்யக்கூடாது. இதை பெரிதாக்குவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றோர் சொல்கின்றனர். ஆனால் இது மாநில பிரச்சினை கிடையாது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கின்றனர். எனவே உலகம் முழுவதும் அந்த நம்பிக்கையை உடையவர்களின் பிரச்சினை இது.
ஆந்திராவில் தங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின் றனர். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
இன்றைக்கு பிரதமரை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். இதே முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்துக்கு சென்று, நிதியை கேட்டிருக்கலாமே. என்னை பொறுத்தவரை முதல்வர் வெளிநாடு பயணத்துக்கு முன்பே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குஷ்பு கருத்து: இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தைதுஷ்பிரயோகம் செய்பவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறுஎந்த மதத்தை தவறாகப் பேசுவதானாலும் உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறதே. மதச்சார்பின்மை என்பதுஅனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான். அதில் பாரபட்சமாக இருக்க முடியாது.
நான் பிறப்பால் முஸ்லிம். இஸ்லாத்தை தொடர்ந்து பின்பற்றுபவள். அதேநேரம், இந்து கடவுள் மேல் பக்தியோடு இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்ட இந்து. எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.