பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர். நடிகர் ஜெயசூர்யா தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது நடிகை சர்மிளா பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாலியல் தொல்லை… சிலர் பெயரைக் கேட்டாலே பயந்துவிடுவீர்கள்: ராதிகா
இதுகுறித்து பேசிய அவர், ‘1997 ஆம் ஆண்டு அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி. மோகனன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் அறையில் வைத்து என்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தார். என் சேலையைப் பிடித்து இழுத்ததும் அங்கிருந்து என் உதவியாளருடன் தப்பினேன். நான் தப்பித்ததால், துணை இளம் நடிகைகளை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதேபோல், இயக்குநர் ஹரிஹரன் என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவை அழைத்து, நான் படுக்கைக்கு ஒத்துழைத்தால் வாய்ப்பு தருகிறேன் என்றார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதனால், அவர் இயக்கிக்கொண்டிருந்த பரிணயம் படத்திலிருந்து எங்களை நீக்கினார்” எனத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் – ஹரிஹரன் கூட்டணியில் 11 திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இதில், ஒரு வடக்கன் வீரகதா, பரிணயம், கேரள வர்மா பழசிராஜா உள்ளிட்ட படங்கள் பெரிய கவனத்தைப் பெற்றதுடன் தேசிய விருதுகளையும் வாங்கியவை. ஹரிஹரன் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, மலையாள சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். அவர் மீது சர்மிளா வைத்த குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: மௌனம் கலைத்த மம்மூட்டி
நடிகை சர்மிளா மலையாளத்தில் 35 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழிலும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் ’நான்’ படத்தில் இளம் வயது விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்தவர். தற்போது, மலையாளம் மற்றும் தமிழில் நடித்து வருகிறார்.
மேலும், தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து எந்த புகாரும் அளிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.