ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகளை பதிந்தது எப்படி? – திருப்பூர் பெண் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகளை பதிந்தது எப்படி? – திருப்பூர் பெண் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகளைப் பதிவு செய்தது எப்படி என கேள்வி எழுப்பிய சென்ன உயர் நீதிமன்றம், இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை பெண் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் தனது தாயாருக்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க ஆட்சேபனையில்லா சான்று பெற விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீது அறிக்கையளித்து வட்டாட்சியருக்கு பரிந்துரைக்க வருவாய் ஆய்வாளரான நாகராஜன் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அசோக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வருவாய் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த நாகராஜன், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.சேஷசாயி முன்பாக இன்று (செப்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அதே குற்ற எண்ணில், அதே புலன் விசாரணை அதிகாரி வேறொரு நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, “ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்தது எப்படி?” என கேள்வி எழுப்பி, இது தொடர்பாக, திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளரான சசிலேகா விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அந்த முதல் தகவல் அறிக்கை எப்படி பெறப்பட்டது என்பது குறித்து மனுதாரர் தரப்பிலும் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.20-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி