ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாயாவதி ஆதரவு

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மாயாவதி பதிவிட்டுள்ளதாவது,

''நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று அளித்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஆதரவானதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் அதன் நோக்கம், நாடு மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டியது அவசியம்'' என மாயாவதி பதிவிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் – ஒப்புதல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று (செப். 18) ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படும். இதில் மக்களவை – சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒரே நேர தோ்தல்களின் சுழற்சியை உறுதிசெய்ய சட்டபூா்வ வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். தொங்கு மக்களவை, ஆட்சி கவிழ்வது போன்ற சூழல்களின்போது புதிதாக மக்களவைத் தோ்தலை நடத்தலாம். அதன்பிறகு அமையும் புதிய மக்களவையின் பதவிக் காலம், முந்தைய மக்களவையின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு மட்டுமே இருக்கும். இதுபோன்ற தருணங்களில், மாநில சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்தல் நடத்தப்பட்டால், புதிய பேரவையின் பதவிக் காலம் மக்களவையின் பதவிக் காலம் வரை தொடரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக இக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்ல செயலாக்கக்குழு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!