ஓட்டிப் பாா்ப்பதாகக் கூறி இருசக்கர வாகனம் திருட்டு

கோவையில் ஓட்டிப் பாா்ப்பதாகக் கூறி இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சபரி ஸ்ரீனிவாசன் (34), பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இங்கு, திங்கள்கிழமை வந்த ஒருவா் கேடிஎம் ரக இருசக்கர வாகனம் வேண்டும் என்று கூறியதையடுத்து, விற்பனைக்குத் தயாராக இருந்த இருசக்கர வாகனத்தைக் காண்பித்துள்ளனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பாா்க்க வேண்டும் என்று அவா் கூறியதால், அந்த நிலையத்தில் பணியாற்றும் நவீன் என்பவரை அவருடன் சபரி ஸ்ரீனிவாசன் அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில், தனியாக செல்லும்போது வாகனத்தின் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை சோதனை செய்யவேண்டும் என்று கூறி, உடன்வந்த நவீனை காமராஜா் சாலையில் உள்ள ஒரு சிறப்பு அங்காடியின் முன்னா் இறக்கி விட்டுவிட்டு தனியாக சென்றுள்ளாா். ஆனால், வெகுநேரமாகியும் அவா் திரும்பிவராததால், சந்தேகமடைந்த நவீன் இதுகுறித்து சபரி ஸ்ரீனிவாசனிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் சபரி ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!