ஓணம் பண்டிகை: தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனை

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனை ஆகின.

சென்னை,

நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில், மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஏற்கெனவே களைகட்டியுள்ளன. களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, பத்மநாபபுரம், திற்பரப்பு, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் ஊஞ்சல் ஆடியும், அத்தப்பூ கோலமிட்டும் மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்றனர்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகைக்காக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து டன் கணக்கில் கேரளாவுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வர். அதன்படி, 2 நாட்கள் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை நடைபெற்றது. மதுரை, பெங்களூரு, ஓசூர், ஊட்டி, திண்டுக்கல், மானாமதுரை, ராஜபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டன.

வழக்கத்தைவிட 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூக்கள் குவிந்தன. நேற்று காலை வரை நடந்த ஓணம் சிறப்பு விற்பனையில் 150 டன் பூக்கள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பூக்கள் விற்பனை குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லிகைப்பூ கிலோ ரூ.1.700-க்கும், பிச்சிப்பூ ரூ.1,350-க்கும், வாடாமல்லி ரூ.180, கோழிக்கொண்டை ரூ.60, கிரேந்தி ரூ.60, ரோஜா ரூ.230, கொழுந்து ரூ.150, சம்பங்கி ரூ.250, தாமரை ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Related posts

சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

செருப்பை கழற்ற கூறிய டாக்டருக்கு அடி, உதை; வைரலான வீடியோ