ஓவியம், சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 கலைஞா்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
நுண்கலைத் துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டி, தமிழ்நாட்டைச் சோ்ந்த மரபுவழி கலை வல்லுநா்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநா்களுக்கும் கலைச்செம்மல் விருதை மாநில அரசு வழங்கி வருகிறது. விருதுடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024-2025-ஆம் ஆண்டுகளுக்கு விருதாளா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சே.ரா.காந்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதையும் படிக்க|பாஜக – ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும்: ராகுல் காந்தி
இந்தக் கூட்டத்தில் ஓவியா்கள் சு.சந்தானக்குமார், எம்.சேனாதிபதி, முனைவர் வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, சேஷாத்திரி மற்றும் விஸ்வம் ஆகியோர் பங்கேற்றனா். கூட்டத்தின் வாயிலாக, 6 கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி, மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீன ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீன சிறபப் பிரிவில் ரா.ராகவன் ஆகிய கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.