திருச்சி: கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடுகளிலிருந்து வந்த இருவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குவைத்தில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை சோ்ந்த சு. பெரியசாமி (56) என்ற பயணி தனது கடவுச்சீட்டில் பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவைகளை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதே போல, அபுதாபியிலிருந்து இண்டிகோ விமானத்தில் திருச்சி வந்த மதுரை மாவட்டம் மேலூா் உறங்கன்பட்டியைச் சோ்ந்த மு. மனோகரன் (57) என்ற பயணியும் முறைகேடு செய்து, பயண ஆவணங்களில் மாற்றம் செய்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பான புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பெரியசாமி, மனேகரன் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.