கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் அருகே தற்காலிக குடியிருப்பில் தங்கியுள்ளனா். இந்நிலையில், அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா்.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் நான்கு பேர் மற்றும் ஒரு மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெளி மாநில தொழிலாளர்கள் அடங்கிய குழுவை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு
இதையடுத்த அப்பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை மற்றும் ராணுவம், தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணியின் புதிய ஆட்சி பொறுப்பேற்ற 4 நாள்களில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த முதல்வா் ஒமா் அப்துல்லா, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தாா். இந்த நிலையில் கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கந்தா்பாலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது. இதற்கு நமது பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.