கனடாவை மிரளவிட்ட 400 கிலோ தங்கம் கடத்தல்: முக்கிய குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் விரைவில் சரண்

167 கோடி ரூபாய் மதிப்பிலான 400 கிலோ தங்கம் கடத்தப்பட்டது.

ஓட்டாவா,

சுவிட்சர்லாந்து நாட்டின் சுரிச் நகரில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஏர் கனடா விமானம் மூலம் கனடாவுக்கு சரக்கு கண்டெய்னரில் தங்கக்கட்டிகள், வெளிநாட்டு பணம் கொண்டுவரப்பட்டது. கனடாவின் டொரோண்டோ பெர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அந்த விமானத்தில் கண்டெய்னரில் 400 கிலோ எடையில் 6 ஆயிரத்து 600 தங்கக்கட்டிகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.

400 கிலோ எடைகொண்ட தங்கக்கட்டிகளின் தற்போதைய இந்திய மதிப்பு 167 கோடி ரூபாய் ஆகும். கடத்தல் சம்பவம் நடைபெற்ற கடந்த ஆண்டு அதன் மதிப்பு 133 கோடி ரூபாய் ஆகும். அதேபோல், இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் கொண்டுவரப்பட்டன. கண்டெய்னர் டொரோண்டோ விமான நிலையத்தின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டது.

ஆனால், சேமிப்பு அறையில் வைக்கப்பட்ட தங்கம், பணம் அன்றைய தினமே மாயமானது. போலி ஆவணங்கள் மூலம் தங்கம், பணம் இருந்த கண்டெய்னர் கடத்தப்பட்டது. இந்த சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் குறித்து மறுநாளான ஏப்ரல் 18ம் தேதி போலீசாருக்கு தெரியவந்த நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றிய பரம்பால் சிந்து, சிம்ரன் பிரீத் பனேசர் உள்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பரம்பால் சிங் (வயது 54), அமித் ஜலோடா (வயது 40), அம்மாட் சவுதிரி (வயது 43), அலி ராசா (வயது 37) பிரசாத் பரமலிங்கம் (வயது 35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடந்த ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்சித் குரோவர் (37) என்பவரையும் கனடா போலீசார் கைது செய்தனர். அர்சித்திற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து கனடா வந்த அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக இந்த கடத்தல் வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சியவர்களை கைது செய்ய கனடா போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கடத்தப்பட்ட தங்கம் மற்றும் பணத்தையும் மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், தற்போதுவரை கடத்தப்பட்ட 400 கிலோ தங்கத்தில் வெறும் ஒருகிலோ (1) தங்கம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 399 கிலோ தங்கம் இன்னும் மீட்கப்படவில்லை. அதேபோல், கடத்தப்பட்ட 16 கோடி ரூபாய் பணத்தில் இதுவரை 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை மட்டுமே மீட்டுள்ளனர்.

இந்நிலையில், கனடா தங்கம் கடத்தல் சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் சிம்ரன் பிரீத் பனேசர் விரைவில் கனடா போலீசில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிம்ரன் பிரீத் பனேசரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பனேசர் ஓரிரு வாரங்களில் கனடா திரும்புவார் என்றும் அப்போது அவர் போலீசில் சரணடைவார் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பனேசர் நிரபராதி என கூறும் அவரது வழக்கறிஞர், கனடா நீதித்துறையில் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், பனேசர் தற்போது எந்த நாட்டில் உள்ளார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

கனடாவை மிரளவிட்ட 400 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் விரைவில் போலீசில் சரணடைய உள்ளதாக வெளியான தகவல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்