கனமழை எதிரொலி; கேரளாவில் 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வயநாடு,

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதில், அதிகாலை 2 மணியளவிலும் பின்னர், 4.30 மணியளவிலும் என அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மக்கள் சிக்கி தவித்தனர்.

கேரளாவில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகின்றன. நிலச்சரிவில் சிக்கியவர்கள் வெள்ள நீரால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் உடல்கள் மண்ணில் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயநாடு பேரிடரை அடுத்து, கேரளாவில் அதிகாரப்பூர்வ முறையில் 2 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்படும். இதேபோன்று, பொது நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்படும். இந்த கால கட்டத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் கனமழை எதிரொலியாக 11 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, வயநாடு, இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், திருச்சூர், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், பொது தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும் அதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்