கனமழை: கடும் போக்குவரத்து நெரிசலில் தில்லி!மழையின் காரணமாக, யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரும் நாள்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தில்லியின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கேரளம் மற்றும் வடமாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் தில்லியில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை பெய்து நிலையில், மழை தொடர்பான பல்வேறு காரணங்களுக்கு 11 பேர் பலியாகியாகினர்.
இந்த நிலையில், மழை இந்த வாரம் சற்று ஓய்ந்த நிலையில், மீண்டும் நகரின் ஆங்காங்கே ஒரு சில பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தில்லியில் உள்ள வடக்கு அவென்யூவிலும், சிவில் லைன்ஸில் உள்ள பகுதியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, தில்லி மற்றும் நொய்டாவில் ஜூலை 17 வரை லேசான மழை தொடரும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.
மழையின் காரணமாக, யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரும் நாள்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நொய்டா கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமழையின்போது இந்த கிராமங்கள் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தன, இதனால் தில்லி மற்றும் நொய்டா இரு பகுதிகளிலும் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.