கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்படுகிறது.
சென்னை,
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
விழாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதி 100 நாணய வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய அன்பான வாழ்த்துகளும் ஆதரவும்.
இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடுவதில் முக்கிய தருணமான, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றியடைய வாழ்த்துகள். அரசியல், இலக்கியம் சமூகத்தில், உயரிய ஆளுமையாக திகழ்ந்தவர் கலைஞர். 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் சிந்தனைகள் உதவும்." என்று தெரிவித்துள்ளார்.