கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 59-ஆக உயர்வு!கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சாராயம் குடித்தவா்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், சிலா் சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் பலியாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பலியானதால், பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.