கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளர்: மீட்க முடியாத நிலை!கேரளத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளரை மீட்கும் பணி 24 மணி நேரமாகியும் நீடித்து வருகிறது.
கேரளத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளரை மீட்கும் பணி 24 மணி நேரமாகியும் நீடித்து வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஜோய். 42 வயதான இவர், மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தம்பானூர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேங்கி இருந்த கழிவுகளுக்கு மத்தியில் சிக்கினார்.
அவருடன் பணிபுரிந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று (ஜூலை 13) இரவு வரை பல்வேறு மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் இறங்கியும் தூய்மைப் பணியாளரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.
இதனிடையே இன்று காலையும் அவரைத் தேடும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டினர். மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் உத்தரவின்பேரில், ஸ்கூபா டைவிங் செய்பவர்களை அனுப்பி தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
எனினும் கால்வாயில் அதிக அடர்த்தியாக கழிவுகள் தேங்கியிருப்பதால், அவர்களால் அப்பணியை செய்து முடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியி நடைபெற்று வருகிறது. இதன் பிறகு தூய்மைப் பணியாளரைத் தேடுவதற்காக படையிலர் உள்ளே அனுப்பப்படவுள்ளனர்.
தூய்மைப் பணியாளர் கால்வாயில் சிக்கி 24 மணிநேரம் கடந்தும், அவரை மீட்க முடியாத நிலையே நீடித்து வருகிறது. மீட்புப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.